Pages

Friday, April 13, 2012

ஆறுதல்

ஆறுதல்  சொல்லவியலாத  இழப்பு
அதற்காக வீழ்வதா சிறப்பு?
ஆவதெல்லாம் அழிவதன்றோ இயல்பு
இதை உணர்வதன்றோ  தெளிவு!

போனவரையே நினைத்திருப்பது  அன்பு
போனவர்க்காக இருப்பவரை வதைப்பதும் தவறு
போனவாறோடு வாழ்க்கை முடிந்தால் நிறைவு
பொய்யான வாழ்க்கை முடியாமல் நீள்கிறதே  எதற்கு?

ஆளுக்கொரு வாழ்வு வைத்தான்  நமக்கு
நாளுக்கொரு வேடம் தந்தான்  அதற்கு
ஆடி முடிக்கும் வரை  தொடர்கிறதே கணக்கு
நாமாக வெறுத்தாலும் தீராதவன் தீர்ப்பு!


சோர்ந்து சோர்ந்து அழுவதனால் என்ன பயன்?
சொல்லேதும் கேளாமல் துவழ்வதில் என்ன பலன்?
சென்று மாண்டவரோடு சாவதில் தானா உனது திறன்?
சோகம் ஒரு கோடி வந்தாலும் போராடி வெல்வதன்றோ  நமது கடன்!
 
நாளாக நாளாக காயம் மாறிவிடும்
நாமாக வாழ தினம் வாழ்வு வரும்
நலமாக்க நமக்குமொரு உறவு வரும்
நன்மையே துணை நின்று வரம் தரும்!

No comments:

Post a Comment