Pages

Monday, April 15, 2013

தண்டனை....


உன் திருமண அழைப்பிதழ்
என் கரங்களில்.......
வலியோடு மனம்
விழியோடு ............

உன் பெயரைப் பார்க்கிறேன்
பெண் பெயரைப் பார்க்கிறேன்...
என் பெயர் இருக்க வேண்டிய இடத்தில்.......

விடையின்றி தண்டிக்கப்பட்டது என் காதல்..
வினாக்களால் துளைக்கப்பட்டது என் காதல்.....
விளங்காமலே விடை பெறுகிறேன் நானும்

குளியல் இனிமை....

ஆற்று நீரை அள்ளி அள்ளி
குளித்த சுகம் கண்டதுண்டா?

ஊற்று நீரைக் கையில் அள்ளி
முகத்தில் அடித்த அனுபவம் கொண்டதுண்டா?

காலை நேரக் கிணற்று நீரின் வெதுவெதுப்பும்
மாலை பொழுதில் அந்த நீரின் சிலுசிலுப்பும்
வேளை தவறாமல் குளித்து அறிந்ததுண்டா?

உப்புக் கரிக்கும் கடல் நீரில்
உயிரைக் கரைத்து குளித்ததுண்டா?
நுரைத்து வரும் அலையோடு
அழைத்துக் காலை நனைத்ததுண்டா?

எத்தனை மரணம் நிகழ்ந்தாலும்
நித்தமும் பயமாய் இருந்தாலும்
சத்தமாய் வீழும் அருவியிலே
சுத்தமாய் குளித்த நினைவுண்டா?

வெயில் தரும் வெப்பம் உணர்ந்ததுமே
வேலையில் இருந்து வந்ததுமே
வியர்வை வாடை கண்டதுமே
விரைந்து சென்று குளித்ததுண்டா?

உச்சந் தலையில் நீர் விழுமே
உயிர் வரை சென்று கொன்றிடுமே
அந்தக் குளியல் அமைந்ததுண்டா?
இந்த சுகங்கள் உணர்ந்ததுண்டா?

குழாய் நீரை தலைக்கு மேலாய்

வீழா வீட்டு குளித்ததுண்டா?

வீழூம் நீரில் சத்தமின்றி

அழுது அழுது கரைந்ததுண்டா?

எத்தனை குளியல் கடந்தாலும்
உள்ளம் தூய்மை ஆகாது....
அழுது அழுது குளித்தப் பின்னே
அடங்கி போகும் உள் மனது................

எங்கே நீ....

மெளனமாயிருந்தாலும்
யெளவனமாய் இருந்தது வானம்...

மரணித்துக் கொண்டிருந்த
அந்தி பொழுதை
வழியனுப்பி விட்டு
உயிர்பித்துக் கொண்டிருந்தது
இரவு தாயையும்
நிலவு மகளையும்.....

வதனமற்ற பெண்ணாய்
வந்து சன்னமாய் பேசி போகும்
சலனமற்ற காற்று.....

ரசிக்க ரசிக்க ரம்மியமாய்
ஓர் இரவு
பார்க்க பார்க்க சகியாத
பெளர்ணமி நிலவு.....

தூரத்தில் நீ
துயரத்தில் நான்..

அழகான ராட்சசி.......

ஆயிரம் கிளைகள் நீட்டி
நிழல் தரும் மரமே போற்றி........

அன்னையாய் தந்தையாய்-உன்னை
வணங்கினேன் அருள்வாய் போற்றி....

மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம்
நலங்கள் கோடி தந்தாய் போற்றி...

பூவாய் பூத்து
காயாய் கனிந்து
தித்திப்பாய் தினம்
தருகின்ற தருவே போற்றி...

காற்றோ புயலோ
அசைக்கும் பொழுதும்
அசைந்தே ஆடி
இசைவாய் நிற்பாய் போற்றி...

பச்சை தேவதையே
பிச்சை கேட்கின்றோம்
மிச்சம் உள்ள காற்றை
நித்தம் செய்வாய் சுத்தம் போற்றி

எத்தனை கவிகள்
பித்தமாய் ஆக
வித்தாய் ஆனாய்
புவியின் சொத்தே போற்றி...

பொழுதொரு நிறம் காட்டி
பொழுதெல்லாம் தலையாட்டி
பல வருடம் கடந்தாலும்
பொழிவிழக்காத பொழிவே போற்றி போற்றி...

போற்றி இன்னும் உன்னை பாட
வார்த்தையின்றி தவிக்கின்றேன்
காற்றில் ஆடும் பொழுதெல்லாம்
கட்டி அணைக்க நினைக்கின்றேன்....

ஏன்? ஏன்? ஏன்?

காரணம் இல்லாமல்
கண்ணீர் வருகிறது
மரணம் நிகழாமல்
மயானம் தெரிகிறது...

தோளே இல்லாமல்- மனம்
சாய்ந்து அழுகிறது
துடுப்பே இல்லாமல் -கலம்
தானாய் போகிறது...

விளக்கு ஒளிர்ந்தாலும்
இலக்கு தெரியவில்லை
வெளிச்சம் தெரிந்தாலும்
விளக்கம் கிடைக்கவில்லை
கிழக்கு வெளுத்தாலும்
வழக்கு தீரவில்லை...

நினைக்க மனமுண்டு
வெறுக்க வழியில்லை
பிணைக்க கரமுண்டு
இணைய உறவில்லை....

விதியைச் சபித்து விட்டு
விலகி நிற்கின்றேன்..
மதியைக் கொன்று விட்டு
வலியால் நிறைகின்றேன்.....

எதையோ தொலைத்து விட்டேன்?
அதை எங்கோ வைத்து விட்டேன்?

எதை நான் தேடிகிறேன்
அதை எங்கே தேடிடுவேன்.....

காரணம் இல்லாமல் கண்ணீர் வருகிறது.....

உன் ஞாபகம்...

என்னை பற்றி
நினைத்துப் பார்க்க
உனக்கு எந்த
ஞாபகங்களும் இருக்காது
ஆனாலும் என்னை
மறந்து விடாதே......
எங்கேனும் சந்திக்க
நேர்ந்தால் பேசாமல்
சென்று விடாதே.....
உன்னை அதிகம் நேசித்தவளாய்
நினைக்க மறுத்தாலும்
உனக்கு வேண்டாதவளாயேனும்
ஞாபகப்படுத்தி பார்.....

உன்னை பற்றிய
ஞாபங்கள் தவிர
என்னிடம் வேறு
எதுமில்லை
எண்ணிப்பார்க்க.......

எங்கோ நீ இருந்தாலும்
என்றோ நீ என்னை மறந்தாலும்
பார்க்கும் ஒவ்வொன்றிலும்
உன்னையே ஞாபகப்படுத்திகொள்கிறேன்
இதை யாரும் அறியா வண்ணம் மறைக்கிறேன்.....

நிலவே இல்லாத வானமாய்
நீ இல்லாத வாழ்வு.......
நினைத்தாலும் வழியாத
கண்ணீராய்
நகைத்தாலும் நகையற்ற
ஓரு முகமாய்........

நட்பா ? காதலா....?


காற்று வீசும் சாலையில்
கைகோர்த்து நடக்கலாம்.......

மலர்கள் மலர்ந்த சோலையில்
மனம் விட்டு பேசலாம்...

அந்தி சாயும் நேரத்தில்
தோளில் சாய்ந்து கொள்ளலாம்...

பெளர்ணமி இரவிலே
பக்கம் பக்கம் அமர்ந்து
மெளனமாக இருக்கலாம்...

அலைவீசும் கடலோரம்...
கைவீசி நடக்கலாம்.....

மழை பெய்யும் மாலையில்
ஒரே குடையில் ஒதுங்கலாம்...

வயல்வெளி தோறும்
கயல் பிடித்துப் பார்க்கலாம்....

அறுந்து விழும் அருவியிலே
ஆடை நழுவ குளிக்கலாம்....

அமைதியான நதியோரம்
இனிமையாகப் பாடலாம்.....

எங்கேனும் மலையடிவாரம் தேடி- ஒரு
திங்கள் வாழாலாம்...

ஆளே நுழையாது வனம் தேடி
மிச்ச வாழ்வை முடிக்கலாம்........

நீ என்னோடு வருவதென்றால்
இதுவெல்லாம் நடக்கலாம்.....

பாதைகள் மாறியே.....


நேற்று வரை
நான் இருந்தேன்
நலமாக

உன்னை கண்ட
பின்னால்
நானானேன் நோயாக..

தனிமை தேடி
அமர்கின்றேன்
ஓர் ஓரமாக

நயனமிரண்டும்
நனைகிறது
ஈரமாக

பயணம் போக
மறுகிறது
என் கால்கள்

பாதை மாறி
போக தவிக்கிறது
என் கண்கள்.....

வலிகள் தந்து
விடைபெற்றாய்
நீயாக.....

திசை எங்கே
தேடுகிறேன்
நெடுநாளாக........

கல்யாணமாமே உனக்கு....

கல்யாணமாமே உனக்கு
காற்றோடு செய்தி வந்தது எனக்கு........

பாழாய் போன மனதை- இரு
கூறாய் பிளக்கிறது
சில நினைவு....
வேரோடு சாய்கின்ற
மரமாய்
வீழ்கிறது உறவு....
உலகம் உற்ற
தோல்வியெல்லாம்
தோளோடு.....
உள்ளம் ஏற்று அழுகிறது
வலியோடு....
சொல்லும் வார்த்தைக்கும்
தெரியாது
கொல்லும் இந்த வலி....

என்னை யாரும் காணாமல்
நானும் யாரையும் பாராமல்
தன்னந்தனியே போகின்றேன்
கண்ணீரில் கரைந்து வீழ்கின்றேன்.....

பணியோடு பணியாய்
பிணைத்துக் கொள்கிறேன்
பின்னோடு வந்து
பிணியாகிறது
உன்னோடு ஞாபகங்கள்......

காரணமே இல்லாமல்
மரண தண்டனை
ஏற்கிறேன்
காதல் கொண்டதால் - அது
தோற்கடித்ததால்....


பத்தோடு பதினொன்றாய்
அத்தோடு இதுவொன்றாய்
உனக்குள் நான்
எத்தோடும் எதனோடும்
ஒவ்வாத ஒன்றாய்
சொத்தாக சத்தாக
எனக்குள் நீ.....

கலங்க வைத்தாய்
காயம் செய்தாய்
காரணம் கூறினாய்
கடைசியாய் கழுத்தையும் அறுத்தாய்........

வாழ்த்த தான் செய்கிறது
இப்போதும் மனது.........
வாழ்ந்து விட்டு போ...

வாழ்ந்து தொலை....


வயிறெரிந்துதான்
வாழ்த்தினேன்
எரிக்கட்டும் உன்னையும்
சேர்த்துதான்

இலக்கியத்தில்
வரும் இலக்கணம்
அல்ல நான்
வழக்கத்தில் வாழும்
பிழைகளும் தான்

சிலுவையில்
நிற்கும் இயேசுவல்ல நான்
உன் பாவங்களை
மன்னித்து மறப்பதற்கு....

நான் என்ன
செய்வேன் ?
நாள் செய்யும் தன்னால்-அந்த
நாள் வரும் பின்னால்........

தினம் ஒரு
துணை தேடும்
உன் இரவுகள்
பிணம் தின்னும்
கழுகு போல்
உன் உறவுகள்
பணம் மட்டுமே
உன் நினைவுகள்....

காலுக்குச் சேராத
செருப்பு நீ
கழற்றி வீசுகிறேன்
வெறுப்பில் நான்......

நல்லவர் போல்
கள்வனுமுண்டு
கண்டு கொண்டேன்
உன் முகதிரை இன்று


வாழ்த்துச் சொன்ன
போது
வாயடைத்துப் போனாய்
வசைபாடுகின்றேன்
வாயை
மூடிச்செல்.......

சீ .... வாழ்ந்து தொலை......


கடலலை மேவும்
கடற்கரை ஓரம்
காதோடு பேசும்
காற்றோடு நானும்.......

இருட்டு விலகாத
இளங்காலை பொழுது
இதமாக வீசும்
இளவேனிற் காற்றும்.....

பார்க்கச் சகியாத
பொன் மாலை பொழுது
பறந்து மறைகின்ற
பறவையாய் நானும்

பனியை அணிந்த
புல்நுனி யாவும்
பார்த்துச் சுகிக்க
பல நாள் வேண்டும்....

இலையோடிருந்தால் ஓர் அழகு காட்டும்
இலையுதிர்ந்தாலும் பேரழகு காட்டும்
சாலையோரத்து தேவதை அவள்
சோலை தோறும் காவலும் அவள்.......



சொல்லடி தோழி
என்னடி கோபம்?
ஏனடி என்னை வதைக்கிறாய்?
உன் கோபச் சொல்லால் எரிக்கிறாய்?

தவறேதும் நான்
செய்ததாக
நினைவில்லையே
தவறியும் உன்னை
புண்படுத்த
நினைக்கவில்லையே!

இழப்புகளின்
நகலாய் நீ....
இருத்தலில்
இனிதாய் யார்?

என் மண்டைக்குள்
குடையும் ஒரு கோடி
கேள்விகளில்
ஒரு பாதி
உன்னது
மறுப்பாயா நீ?

சபையில் யாரேனும்
உன் சங்கதி
பேசினாலும் அதற்காக
அடிக்கடி பதிலடி
கொடுத்தவள் நானடி.

உன் பக்கம்
தப்பென்றிருந்தாலும்
தவறாமல் சரியென்று
சொல்பவள் நானடி.....

உன் பக்கம்
பிழையேயானாலும்
இல்லையென மறுத்தவள்
நான்.....

கொஞ்சம் காலமாக
நஞ்சாக இருக்கிறாய்....
அஞ்சாமல் என்னை
பஞ்சாக எரிக்கிறாய்...

என் பிழையை மட்டும்
பொறுக்கக் கூடாதா?
உன் ஞாயத்தராசில்
நிறுத்தலாகாதா?

செய்வதைச் செய்து விட்டு
செய்வதறியாமல்
தவிக்கிறாய்....
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலையும் ஆட்டுகிறாய்.....

இதற்கெல்லாம் கோபமா?
நட்பில் இதுவெல்லாம் சகஜமா?

உரிமை உள்ளதால்
உடைகிறேன் என்கிறாய்...
குற்றம் உள்ளதால்
குத்திக் காட்டுகிறேன் என்கிறாய்........

உன் ஞாயம் நீதியெல்லாம்
உன்னோடு நான் கொண்ட
நட்பின் மீதுதானா?
உன் கோபம் தாபமெல்லாம்
என்னை
தோற்கடிப்பதில்தானா?

பலநாளும் தோற்றவள் நானே...- அதை
ஒருநாளும் அறியாதவள் நீ தானே.....

நட்பில் ஞாயம்
பார்க்கும் ஞானப்பெண்ணே.......
நீ குத்திக் கிழித்தது
என் இதயம்....
அதில் குருதி
வலிகிறது
நீண்ட நெடுநாளாய்....
நாடிய நட்பு
காக்கிறது மெளனமாய்..........

சோதனை.....


கொடுக்கப்பட்ட நேரம்
குன்றி குறுக....
தொடுக்கப்பட்ட கேள்விகள்
நீண்டு வளர.....

கேள்விகள் புரியாமல்...
விடைகள் தெரியாமல்
விழிகள் பிதுங்க...
ஞாபகச் சக்தியைச்
சபித்தப்படி
நகர்கின்ற காலத்தை
நுகர்கின்ற கோலம்
கொடுமையடி.....

இன்னும் கொஞ்சம்
படித்திருந்தால்
இந்தக் கேள்வி
முடிந்திருக்கும்
என்று எண்ணி
நொந்தப்படி
மென்று தின்றேன்
கேள்விகளை...........

ஆழமாய் சிந்திப்பதுபோல்
அழகாய் நடித்துக்கொண்டு
நீளமாய் பார்வை ஓட விட்டேன்
தூரமாய் இருந்த நண்பன்
ஏக்கமாய் என்னை பார்த்திருந்தான்
ஏளனமாய் கொஞ்சம் நகைத்து வைத்தான்....

மூளையைக் கழற்றி
சலவைச் செய்ய
முயன்று தோற்றேன்...
படித்தவையோ கொஞ்சம் - அது
படிக்காததை மிஞ்சும்....
கேள்வியைப் பார்த்து பார்த்து
அஞ்சும் நெஞ்சம்
கடவுளையும் கொஞ்சம் கெஞ்சும்......

படியாமல் இருந்ததன்
விளைவு
பரீட்சையில் தந்தது
நோவு
படித்துப் படித்துச் சொன்னார்கள்
பரீட்சைக்குப் படியென்று கொன்றார்கள்
சொன்னவரெல்லாம் வென்றவர்தானா
என்று இறுமாப்புடனே நானிருந்தேன்
இன்று இயலாமையினால் நான் வீழ்ந்தேன்......