Pages

Wednesday, August 25, 2010

அன்புள்ள அப்பா- இந்த
அழைப்புக்கு நீ ஏற்றவன் தானா?
என்னையும் அம்மாவையும்
நடுத்தெருவில் நடுநிசியில்
நட்டாற்றில் விட்டவனாய் தான்
உன்னை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்...

என்னை மறந்து போனவனே
என்னை துறந்து வாழ்பவனே
நீ இறந்து போனதாக
காற்று சுமந்து வரும்
செய்திக்காக
வளர்ந்து நிற்கிறேன்
என் காதுகளைத்
திறந்து வைக்கிறேன்...
அன்று நடந்த நாடகத்தை
இன்று புரிந்து கொள்கிறேன்.

அந்தக் கசந்த நாளை
எண்ணி அசந்ததுண்டு பல நாள்
சின்னஞ் சிறு வயதில்
அம்மாவின் விரலைப் பற்றியபடி
நானும் தம்பியுமாய்
வீட்டுப் படியைத் தாண்டி வருகிறோம்..

அப்பா என்ற ரத்த பந்தமும்
பாட்டி என்ற ரத்தச் சொந்தமும்
தாத்தா என்ற ஓர் உறவும்
சிற்றப்பா என்ற ஓர் உறவும்
அத்தை என்ற பல உறவும்
ஒன்றாய்க் கூடி - எங்களை
நன்றாய் விரட்டியடித்தீர்கள்...

யாரிடம் இந்தக் கதையைச்
சொன்னாலும் சொல்லி
வைத்தது போல் ஒரு
கேள்வி கேட்பார்கள்
இத்தனை பேரும்
மொத்தமாய் இருந்தும்
சத்தம் ஏதும் போடாமல்
போகாதே என்று மெதுவாய்க் கூட
தடுக்காமல் இருந்ததும் தான் ஏனோ?

அப்பா விட்டது தொல்லை
என்றிருந்தாயா?
பாட்டி குறைந்தது செலவு என
நினைத்தாயா?
தாத்தா என் பிள்ளை
ஆண்பிள்ளை என இருந்தாயா?
சிற்றப்பா எனக்கென்ன வந்தது
என்று மெளனித்தாயா?
அத்தை மிஞ்சியது சொத்து
என்று பேசாதிருந்தாயா?

அம்மாவுக்கும் உனக்குமான
சண்டையில் - எங்களை
தனியே தவிக்க விட்டதேன்?
எனது சின்னஞ்சிறிய பருவமெல்லாம்
அதட்டலிலும் மிரட்டலிலும்
விரட்டலிலுன் கரைந்து போனது....

எங்குப் போனாலும்
என்னை அந்நியப் படுத்தும்
பார்வைகளால் அநியாயமாய்
சுதந்திரத்தை அபகரித்ததுமேன்?

அப்பா அதிகமாய் பேசாத
நீயும் அம்மாவும் என்னை பற்றி
பிறர் அதிகமாய் பே(ஏ)ச
வைத்து விட்டாயே ஏன்?

அப்பா எல்லோரும் அவரவர் அப்பாவோடு
ஆடி பாடி விளையாடும் போது
ஓர் ஓரமாய் நானும் தம்பியும்
எங்கே போனான் என் அப்பன் என்று
தேட வைத்தாயே ஏன்?

சின்னச் சின்ன ஆசைகளுக்குக் கூட
ஒரு சம்பள நாளை
எதிர்பார்க்க வைத்து விட்டாயே ஏன்?
நல்லா படிச்சா
இதை வாங்கிகொடு
நல்ல பிள்ளையாய் இருந்தால்
அதை வாங்கிக்கொடு
என்று எல்லாவற்றுக்கும்
யாரையாவது கேட்க
வைத்து வாழ விட்டாயே!
பிச்சை கேட்க வைத்து
வாழ விட்டாயே அப்பா!

உனக்குப் புரிகிறதா என் வலிகள்?
உனக்கு கேட்கிறதா என் வினாக்கள்?
உரிமையோடு உறவிருந்தும்
தெருவோடு விட்டனையே
உன் உணர்வோடு எங்கள்
நினைப்பில்லையா?

உன் அம்மாவும்
எனக்கு பாட்டியுமாய்
இருப்பவளைக் கேட்டுச் சொல்
இது தப்பில்லையா?

நான் செய்த தவறென்ன
இரவெல்லாம் கேட்கிறேன் - என்
இளவயது ஆசையெல்லாம்
இமைக்குள்ளே
கண்ணீராய் கரைந்ததென்ன?

எங்கிருக்கிறாய் அப்பா? - என்
நினைவிருக்கிறதா அப்பா
அம்மாவை மறந்தாய் தப்பில்லை
உன் ரத்த பந்தமான என்னையேன்
துறந்தாய் தவறில்லையா?

ஒவ்வொரு வரிகளிலும்
நான் பட்ட ரணங்களின்
வெளிப்பாடு!
என்னை விட்டு எங்கோ இருக்கும்
உனக்கு புரியுமா? என் பாடு!

அதட்டி பேசும்
அனைவரையும் பார்க்கும் போது
விரட்டி அடித்த உன்னை
துரட்டி, துரட்டி கொல்ல வேண்டும்
என்ற எண்ணம் சுழற்றி சுழற்றி
அடிக்கிறது என்னை.

பேப்பரில் வந்ததாம்
என் படத்தோடு
பிறந்தநாள் வாழ்த்து
பேப்பரில் படம் போட்டுக் காட்டி
பாசம் என்றால்
நான் பேப்பரை தின்றா வாழ்வது?
ஆண்டுக்கொரு முறை பேப்பரில்
மலரும் உங்கள் அபரிபிதமான
அன்பை வைத்துக் கொண்டு
நாளெல்லாம் வாழ்ந்து விட இயலுமா?
பெற்ற பிள்ளையைப் பேணாமல்
ஏழைக்கு அன்னதானம் வழங்கினால்
பாவமன்னிப்பு கிடைத்துவிடும் என்ற எண்ணமா?

என்னைக் காக்க மறந்தவனே
என்னை வளர்க்கத் தவறியவனே
எந்த நம்பிக்கையில் காப்புறுதி கட்டுகிறாய்
நான் செத்தால் மொத்தமாய்
பணம் கிடைக்கும் என்பதற்கா?

எல்லா தவறும் என்
தாயுடையதாகவே இருக்கட்டும்
தறியும் தவறாதவனே
உலக மகா நல்லவனே
உண்மையுடன் இருப்பவனே
நேர்மையெனும் வழையில் நடப்பவனே
தாயெனும் கோவிலைத் துதிப்பவனே
உனக்குத் தப்பாமல் பிறந்த நான் மட்டும்
அப்பாவென வருவேன் என நினைத்தாயா?

என்னைக் காக்க வக்கில்லாத
உனகேன் மீசை?

உன் மீதான என் குற்றச்சாட்டுகள்

உறவை அறுத்தாய்
உரிமையைப் பறித்தாய்
கடமையை மறந்தாய்
ஜீவனாம்சம் கொடுக்க பயந்தாய்
கணவனாய், அப்பனாய்
இல்லாமல் இருந்தாய்
நீயேன் பிறந்தாய் - உன்
தாய் தான் உனக்கு
முக்கியமென்றால்
என் தாயை ஏன் மணந்தாய்?
எங்களை ஏன் இப்படி வதைத்தாய்?

இறுக்கம் தளர்ந்து
இமைகள் கசிந்து
இதயம் வலிக்கும் பல பொழுதும்
இதழ்கள் தவித்து
வார்த்தைகள் மறந்து
மெளனத்தில் அழுத பல பொழுதும்

ஒரு நினைப்பு மட்டும்
நிரந்தரமாய் நெஞ்சுக்குள்
நெருப்பாய் எரிந்து
கொண்டிருக்கிறது.......

இப்படி பிச்சை எடுத்து
தின்ன வைத்த உன்னை
மன்னிக்கும் மனம் வருமா
எந்த பிள்ளைக்கும்?

No comments:

Post a Comment